உலகமயமாக்கல்
உலகமயமாக்கல் எனும் இந்தச் சொற்பதத்தை பிரான்சில் கல்வி கற்கும் போதுதான் முதன் முதலாக அறிந்து கொண்டேன். உலகமயமாக்கல் என்பது உலகில் உள்ள நாடுகள் அனைத்தையும் முன்னேற்றும் வழி என்றுதான் மேலை நாட்டுக் கல்வி போதித்தது. பின்னாளில் உலக மயமாக்கல் என்பதே உடல் நலத்துடன் உள்ள ஒரு விளையாட்டு வீரனுக்குப் போட்டியாக ஒரு ஊனமுற்றவனை ஓட வைக்க முயலும் அபத்தமான வழி என்பதுடன் உலகிலுள்ள தேசிய இன மக்களின் நலன்களையும் அவர்களின் மண் வளங்களையும் எந்த அளவிற்கு பாதிக்கின்றது என்பதையும் தெரிந்து கொண்டேன்.
ஊலகமயமாக்கல் என்றால் என்ன? உலகெங்கிலும் உள்ள வணிகம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை ஒன்றாக இணைத்து நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல், வணிக, பொருளாதார தடைகளை நீக்கி உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்குவதே உலகமயமாக்கலின் நோக்கம். முதலாளியத்தின் புதிய வடிவமாக இதைக் கொள்ளலாம். இன்றைய தமிழ் மாணவர்கள் அதிலும் குறிப்பாக மேலை நாடுகளில் கல்வி கற்பவர்கள் உலகமயமாக்கல் தன்மைகளில் வெகுவாக உட்படுத்தப் படுகின்றனர். இன்றைய கல்வி என்பது மனித குல நன்மையை அடிப்படையாகக் கொண்டிராமல் முழுக்க முழுக்க பணத்தைக் குறிவைத்து அதற்காகவே மேற் கொள்ளும் ஒன்றாக மாறி வருகிறது. முழுக்க முழுக்க முதலாளித்துவ கருத்தியலையே அதுவும் கொண்டிருக்கிறது.
உலகமயமாக்கல் என்பது எந்தளவிற்கு உலகில் பெரும்பான்மையாக உள்ள அடிதட்டு மக்களின் வாழ்க்கையை காவு கொண்டு வருகிறது என்பதை நம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. உலகமயமாக்கலின் பொதுமைப் பண்பே அதுதான். அதன் எல்லைகள் விரிவாகிக்கொண்டே போகும் ஆனால் சமத்துவம் இருக்காது. முதலாளிகளுக்கு கொள்ளை இலாபத்தை அது ஈட்டிக் கொடுக்கும். ஆனால் வறுமையை அது மேன் மேலும் அதிகரிக்க வைக்கும்.
உள்ளுர் விவசாயிகளும் சிறு தொழில் செய்து பிழைத்து வரும் மக்களும் பன்னாட்டு நிறுவனங்களின் படை எடுப்பால் தங்களின் உற்பத்திப் பொருளை சந்தைப் படுத்த முடியாமல் திணறுகின்றனர். இறையாண்மையைப் பற்றி வாய் கிழியப் பேசும் அரசாங்கங்களே தங்களின் மூலதனங்களையும் சொத்துக்களையும் தனியாருக்கு விற்று விடும் அளவிற்கு பெருமுதலாளிகளின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகிறது. இப்படி ஒரு வளர்ச்சியை கார்ல் மார்க்ஸ் கூட கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. விளைவு கீழைத் தேச நாடுகளில் வறுமை பெருக் கெடுத்து ஓடுகிறது. தற்கொலை செய்து கொண்ட தஞ்சாவூர் விவசாயிகள், எலிக்கறி சாப்பிட்டு உயிர்வாழும் சாலைப் பணியாளர்கள்;, பெரு முதலாளிகளின் வணிகப் படை எடுப்பால் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த தங்களின் சொந்த நிலங்களைவிட்டு வெளியேறி கையறுந்த நிலையி நிற்கும் பழங்குடி மக்கள் அனைவரும் உலகமயமாக்கலின் கோரப் பசிக்கு இரையானவர்களே. இயற்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது.
இதன் விபரீத விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது மார்க்ஸ் வரையறுத்த முதலாளித்துவத்தையும் தாண்டிய ஒன்றாகத்தான் இதைக் கருத முடிகிறது. முன்பு பிற நாடுகளின் மீது பொருளாதாரச் சுரண்டலை மேற் கொள்வதற்கு இராணுவத்தைப் பயன் படுத்திய ஏகாதிபத்திய அரசுகள் இன்று இராணுவத்திற்கு பதிலாகப் புதிய வழிகளை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. ஆம் ஏகாதிபத்தியத்தின் இடக்கரடக்கல்கள்தாம் (euphemism) உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல் போன்றவைகள். ஆகையால் புதிய கொலனியம் என்று இதை அழைக்கலாம் அல்லது பின் முதலாளித்துவம் (post capitalism) என்று ஏதாவது பெயரைக் போட்டுக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்திய வெறியர்களின் சுரண்டல் மற்றும் அதற்கு அடிபணியும் உள்ளுர் கொள்ளையர்களின் ஆதிக்கம் என்பதுதான். இதிலிருந்து விடுபடுவதற்கு வழி இல்லையா என நினைக்கும் போது இரண்டு வழிகள் தோன்றுகின்றன
முதலாளித்துவத்தின் பிறப்பு வளர்ச்சி, வாழ்வு, சரிவு, அழிவு போன்றவற்றை விலாவாரியாக விளக்கி ‘மூலதனம்’ (The capital) என்ற வரலாற்றுப் புகழ் மிக்க நூலை எழுதிய பேராசான் கார்ல் மார்க்ஸ், அந்த நூலில் முதலாளித்துவத்தின் அழிவில் சோசலிசம் மலரும் என்று குறிப்பிடுகிறார். இன்று மார்க்ஸ் கற்பனை செய்திருப்பதை விட பெருவளர்ச்சி கண்டிருக்கும் முதலாளித்துவச் சமூகத்திற்குள்ளே பல நூறு போட்டிகள் நிலவுவதைப் பார்க்கிறோம். நிலவுடைமைச் சமூகம் தகர்ந்து முதலாளித்துவச் சமூகம் பிறப்பெடுத்தது போல் இந்த போட்டிகள் முற்றி வெடித்து இன்றைய முதலாளித்துவச் சமூகம் தகர்ந்து சோசலிச சமூகம் பிறப்பெடுப்பதும் வரலாற்றின் கட்டாயமாக மாறலாம். மார்க்சின் விருப்பமும் இதுதான்.
அடுத்து, இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய இடத்தை பிடித்து விட்ட உலகமயமாக்கலை பின் நோக்கிச் செலுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. இருப்பினும் அதனைக் கட்டுப் படுத்த முடியும். பல நாடுகளில் நடைபெற்று வரும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் இங்கு கவனம் கொள்ளத்தக்கது. தேசியங்களுக்குள் ஏற்படும் சுயநிர்ணய உரிமையும் அதன் அடிப்படையில் விடுதலை பெற்ற அந்தந்த தேசிய இனங்களுக்குள் ஏற்படும் சமத்துவமான உறவும் உலகமயமாக்கலை கட்டுப் படுத்தும் வல்லமை பெற்றவை. ஏனெனில் நாடுகளுக்கிடையில் உள்ள வணிகத் தடைகள் அற்றுப் போனபோதுதான் உலகமயமாக்கலின் வளர்ச்சி தீவிரம் அடைந்துள்ளது. மக்களின் நலன் அடிப்படையில் போராடி வெற்றி பெறும் தேசிய இனங்கள் அதன் அடிப்படையில் தங்கள் அரசுகளை அமைத்துக் கொள்ள முன்வரும்போது தடைகள் அதிகமாகின்றன. தடைகள் அதிகமாகும்போது உலகமயமாக்கல் எனும் இந்த புதிய முதலாளியம் கட்டுப் படுத்தப் பட்டு பாதியில் நின்று போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. முதலாளியத்தின் உச்சக் கட்ட வளர்ச்சியே ஏகாதிபத்தியம் என்றார் லெனின். முதலாளியத்தின் வளர்ச்சி கட்டுப் படுத்தப்பட்டு அதற்கு மேல் அது வளர முடியாமல் போகும் போது ஏகாதிபத்தியமும் இயல்பாகவே சரிவைச் சந்தித்து மண்ணைக் கவ்வும்.
இங்கு பலருக்கு முக்கியமான கேள்வி ஒன்று எழுவது தவிர்க முடியாதது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சோசலிசப் புரட்சிகள் இறுதியில் தோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம்? என்பதே அது.
சோசலிச சமூகத்தைக் கட்டி எழுப்ப முயன்ற அரசுகள் பின்னர் கொம்யூனிசத்தின் பேரால் சர்வாதிகார ஆட்சியை நடத்தின. அந்தத்த நாடுகளில் ஜனநாயகம் மறுக்கப் பட்டது. ஏகாதிபத்தியத்திற்கு போட்டியாக இராணுவ பலத்தைக் கட்டி எழுப்பியதில் காட்டிய தீவிரத்தை விவசாயம் அபிவிருத்தி போன்றவற்றில் காட்டாதது சேசாலிச நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் ஒரு முக்கியமாக வரலாற்று உண்மையை சுட்டிக் காட்ட வேண்டும். முன்னாள் சோவியத் யூனியனில் சோசலிசம் விழ்ச்சியுற்றபோது பிரிந்து சென்ற நாடுகளின் நிலை முன்னரை விட மோசமாசவே தற்போது உள்ளன. ஆம் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை சேசலிசத்தின் வழியாகத்தான் சரி செய்து கொள்ள முடியுமே தவிர முதலாளித்துவம் அதற்கு ஒரு போதும் ஈடாகாது.
தேசிய இனங்களின் விடுதலையை புறக்கணித்து சகட்டு மேனிக்கு முதலாளிய எதிர்ப்புப் பேசும் கொம்யூனிஸ்டுகளின் போக்குகள்; தேசிய இன விடுதலையாளர்களை அவர்களோடு கைகோர்ப்பதற்கு தடையாக உள்ளன. கஷ்மீர், பாலஸ்தீனம் போன்ற தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் கலக்கும் இஸ்லாமியத் தீவிரவாதமும் அதன் விளைவுகளால் ஏற்படும் பயங்கரவாத செயல்களும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தன்மைக்கு மாசு கற்பிக்கின்றன. தேசிய இன விடுதலை என்பது பாதிக்கப் பட்ட மக்களுக்காகவே தவிர மதத்திற்காக அல்ல. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை சரிசெய்து கொண்டு சேசலிசவாதிகளும் தேசிய இன விடுதலையாளர்களும் ஒன்று சேர்ந்து முன்னேறுவார்களானால் சென்ற நூற்றாண்டில் ரஷ்யாவில் நடந்த ஒக்டோபர் புரட்சி போல் இந்த நூற்றாண்டிலும் ஒரு சோசலிசப் புரட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட இந்தப் புதிய ஜனநாயக சோசலிசம் உலகெங்கும் பூத்துக் குலுங்குவதற்கும் வாய்பு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment