புராணங்களும் இதிகாசங்களும்
புராணங்கள் இந்து மதத்தின் அடிப்படை வேர்கள் புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை. ஏனெனில் புராணங்களில் வரும் கதாபாத்திரங்களே இந்து மதத்தில் கடவுள்களாக விளங்குகின்றன.
ஆத்திக அன்பர்கள் புராண இதிகாசங்கள் மீது இரு வித கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். பலர் அவற்றை உண்மையானவை என்று முழுதாக நம்புகிறார்கள். வேறு சிலர் அவை கற்பனையாக இருந்தாலும் அவை போதிக்கும் கருத்துக்கள் நீதியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவையாக இருக்கின்றன என்கிறார்கள். சிறு வயதில் நான் முதல் கருத்தையும் அதன்பின்னர்; இரண்டாவது கருத்தையும் கொண்டிருந்தேன். தற்போது புராணங்கள் தொடர்பான எனது கருத்துக்கள் தலைகீழாக மாற்றம் பெற்றிருக்கின்றன.
புராணங்களில் வரும் கடவுள் பாத்திரங்கள் விலங்குகளும் மேற்கொள்ளாத இழிந்த முறையை மேற்கொண்டுள்ளன என்பதை பக்த கோடிகள் பாராயணம் செய்யும் புராண ஏடுகளே நமக்கு சாட்சியாக விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக
தாருகா வனத்து முனிபத்தினகளை பாலியல் வல்லுறவு கொண்ட சிவனார்,
தான் பெற்ற மகளான திலோத்தமையை தனது தாரமாக்கிக் கொண்ட பிரம்மா,
தனது கண்ணன் அவதாரத்தில் பல்லாயிரக் கணக்கான கோபியருடன் ராஸ லீலை நடத்திய விஷ்ணு.
இந்த மும்மூர்த்திகள் முவரும் சேர்ந்து அத்தி என்ற முனிவரின் மனைவியான அனுசூயையை நிர்வாணக் கோலத்தில் பார்க்க முற்பட்டது என இந்தப் புண்ணியக் கதைகளின் ஒழுக்க விழுமியங்கள் நைல் நதி அளவுக்கு நீளுகின்றன. மும்மூர்த்திகளின் செயல்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லியா தெரிய வேண்டும். இவை எந்த ஒழுக்கத்தையும் நீதியையும் போதிக்கின்றன என்பதை இதைப் படிப்பவர்களின் முளையின் செயற்பாட்டிற்கே விட்டுவிடுகிறேன்.
கடவுளர்களின் செயல்களை வெறும் பால் மயக்கத்தோடு பார்க்கக்கூடாது என வாதிடுபவர்களும் உள்ளனர். பாலியல் என்பது தவறான கருத்து அல்ல. உடலின்பத்தின் சுவைகளை வள்ளுவரின் இன்பத்துப் பால் வெளிப்படையாகவே பகர்கிறது. அகநானூறு குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்கிளிலும் பாலியல் கருத்துக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.
ஆனால் புராணங்கள் உடல் ஒழுக்கத்துடன் பாலியலைப் பேசவில்லை. பிறன் மனை நோக்கியவர்கள், பெற்ற பெண்ணையே பெண்டாள நினைத்தவர்கள், விலங்குகள் என்றும் பாராமல் அவற்றோடும் உடலுறவு கொண்டவர்கள் என அருவருக்கத்தக்க செயல்களை செய்தவர்களை தேவர்கள் என்றும் கடவுள்கள் என்றும் போற்றுகின்றன புராணங்கள்.
புராணங்கள் தமிழர்களுடைய சொத்து அல்ல. இது போன்ற அருவருப்பான கதைகளை பழந்தமிழர் எழுதவும் இல்லை. புறநானுற்றில் ஒரு காட்சி, காதலன் ஒருவனுக்கு மார்பில் வேல் பாய்ந்து விடுகிறது அவன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒடி வருகிறான் ஏன்? பூமியின் மடியில் விழுவதைவிட தனது காதலியின் மடியில் இறப்பதை அவன் விரும்புகிறான். இறுதியில் அவனது காதலியின் மடியில் உயிர் விடுகிறான்.
இதைப்போல் குறுந்தொகையில் இரு மான்கள் தாகத்துடன் செல்கின்றன வழியில் தென்படும் சிறு குட்டையில் ஒரு மான் அருந்துவதற்குத்தான் நீர் உள்ளது. இரண்டும் சென்று வாயை வைக்கின்றன ஆனால் நீர் அப்படியே உள்ளது. ஆண் மான் குடிக்கட்டும் என்று பென் மானும் பெண்மான் குடிக்கட்டும் என்று ஆண்மானும் தங்கள் தாகத்தின் வலியை மறைக்கின்றன. இவைகள் அல்லவா பண்பாட்டின் வேர்கள். ஆனால் நம்மவர்களோ தமிழ் இலக்கியங்களின் பெருமை தெரியாமல் புராணச் சாக்கடைக்குள் முகம் புதைக்கின்றனர்.
நமது பழந் தமிழ் இலக்கியங்களில் வரும் கதைகளை படிக்கும் போது வீரம் மிளிர்கிறது. நேர்மைப் போரிடை புகுந்து வாழாத தமிழனை வரலாறு மதிக்காதென்பது அக்கதைகளில் தெரிகிறது. இமய வரம்பினில் புலிக் கொடியைப் பறக்க விட்ட கரிகாற் சோழன், தமிழைப் பழித்த கனக விசயரின் தலையில் கல்லினை ஏற்றி கண்ணகிக்கு விழா எடுத்த சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை வென்ற தலையனங்கானத்துச் செருவென்ற பாண்டியன், எதிரியிடம் சரணடைந்து உயிர் வாழ்வதை விட மரணம் பெரிதென அதனை வரவேற்ற கணைக்கால் இரும்பொறை போன்றவர்களின் கதைகளைப் படிக்கும் போது வீரமும் தியாகமும் கொப்பளிக்கக் காண்கிறோம். சாத்திரம் காட்டும் கட்டுக்கதைகளில்கூட தமிழன் சரித்திரம் காட்டும் கற்பனைக் கதை முளைத்ததில்லை.
ஆனால் இதிகாசங்களில் வரும் போர்களிலோ சூது, வஞ்சகம் தவிர வேறு என்ன இருக்கிறது. வாலி, பீஷ்மர், கர்ணன், துரியோதனன், அபிமன்யு என ஒருவருமே நேர்மையான முறையில் கொல்லப் படவில்லை. போரில் ஆயுதம் தரிக்க மாட்டேன் என தான் செய்த சத்தியத்தையும் மீறி கடவுள் அவதாரமாகக் கருதப் படும் கண்ணனே பீஷ்மரைக் கொல்ல சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு ஓடிய கூத்துக்கள்தான் இவற்றில் நிறைந்திருக்கின்றன.
அதீதக் கற்பனை கொண்ட கதைகளை நாங்கள் நம்பத் தேவையில்லை அதற்காக அவைகளை வெறுக்க வேண்டிய கட்டாயமில்லை. புராணக் கதைகள் பல நாடுகளில் இருந்திருக்கின்றன. குறிப்பாக கிரேக்க நாட்டு புராணக்கதைகள் மிகவும் புகழ் பெற்றவை. ஆனால் அந்தக் கதாபாத்திரங்களுக்கு யாரும் கோவில் கட்டி குடமுழுக்கு செய்வதில்லை. ஒரு காலத்தில் கடவுள்களாக வழிபட்ட அந்த கதாபாத்திரங்களின் சிலைகள் தற்போது அருங்காட்சியத்தில் காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. அவற்றின் வழிபாட்டு இடங்கள் வெறும் புராதனச் சின்னங்கள் என்ற முறையில்தான் கிரேக்கம் போன்ற நாடுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்துப் புராணங்களின் தன்மையோ சற்று வேறுபட்டது. அவை வெறும் அதீதக் கற்பனைக் கதைகளாக மட்டும் இருந்தால் பட்டி விக்கிரமாதித்தன் கதைகளைப் போல் அல்லது தற்போது மேலை நாடுகளில் சக்கை போடு போடும் ஹரிபோர்டர் போல் வாசித்துவிட்டுப் போகலாம். மாறாக அவைகளில் தமிழ் விரோதப் போக்குகள் காணப்படுகின்றன. வேத உபநிடதங்களைப் போல் இவைகளும் பார்ப்பனர்களை உயர்த்தி சூத்திரர்களை தாழ்த்தியே எழுதப்பட்டிருக்கின்றன. மகாபாரத்தில் துரோணர் என்ற பிராமணருக்காக ஏகலைவன் என்ற சூத்திரனின் கட்டை விரல் வெட்டப்பட்டது இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. புராண இதிகாசங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அவை ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த போர்களை மையமாக வைத்து எழுதப்பட்டது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். தங்களை எதிர்த்த தமிழ் மன்னர்களைத்தான் ஆரியர்கள் அசுரர்களாகவும், அரக்கர்களாகவும் சித்தரித்து புராணங்களைப் படைத்தார்கள். அத்துடன் இராவணனுக்கு பத்துத் தலை போன்ற அதீத கற்பனைகளையும் சேர்த்தார்கள்.
பிறவிப் பெண்ணடிமைத்தனம் புராண இதிகாசங்கதைகளில் மித மிஞ்சிக் காணப் படுகின்றது. குஷ்டம் பிடித்த கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சென்ற நளாயினி, கட்டிய கணவனின் சுடு சொல் கேட்டு தீக்குள் குதித்த சீதை, இந்திரனோடு கட்டிலில் கூடிய அகலிகை, பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் பொது மனைவியாக இருந்த பாஞ்சாலி, கணவன் பார்வையற்றவன் என்பதற்காக கண்ணைக் கட்டிக் கொண்ட காந்தாரி போன்றவர்களை எண்ணும்போது பெண் என்பவள் விறகுக் கட்டைக்கு ஒப்பாகத்தான் ஆரிய தர்மத்தில் மதிக்கப் படுகிறாள் என்பது புலனாகிறது.
புராணங்களும் இதிகாசங்களும் பண்பாட்டையும் நீதியையும் போதிக்கும் கதைகள் அல்ல. மாறாக ஒழுக்கக் கேடுகளும் மனித ஏற்றத் தாழ்வுகளும் கபட நாடகங்களும்தான் அதில் நிறைந்து காணப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment